கேரளத்தில் இணையவழி வகுப்பைப் பார்க்க முடியாததால் பத்தாம் வகுப்பு மாணவி தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கேரளத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இணையவழி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய இந்த மாணவி, மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார்.
தந்தை கூலித் தொழிலாளி. கொரோனா கால பொது முடக்கம் காரணமாக இவருடைய வீட்டில் பழுதாகி விட்ட தொலைக்காட்சிப் பெட்டியைப் பழுது பார்க்க முடியவில்லை.
இந்த நிலையில் திங்கள்கிழமை இணையவழி வகுப்பு தொடங்கியபோது, செல்லிடப் பேசியிலும் பேட்டரி சார்ஜ் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த மாணவியால் வகுப்பைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.
இதைத் தொடர்ந்து மிகவும் சோர்வாகக் காணப்பட்ட மாணவி, வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். மகளைக் காணவில்லையே எனத் தேடிச் சென்றபோதுதான், வீட்டுக்கு அருகே மண்ணெண்ணெய் ஊற்றி அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தொலைக்காட்சிப் பெட்டியோ, செல்லிடப் பேசியோ இல்லாத மாணவ, மாணவிகளுக்கெனத் தனி ஏற்பாடுகள் செய்திருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்று உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆபித் ஹுசைன் தகவல் குறிப்பிட்டார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவி, நன்றாகப் படிக்கிறவர். கொரோனாவால் வேலையுமின்றிக் கையில் பணமுமில்லாததால் டி.வி.யைப் பழுதுபார்க்க முடியாமல் போய்விட்டது என்றும் தகவல் தெரிவித்தார்.