வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்தே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பால் என்ற இடத்திலுள்ள தனியார், பள்ளியில், zoom செயலி மூலம் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் ஆன்லைனில் வகுப்பு எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, ஆன்லைன் ஸ்ட்ரீமிங்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பியதாக தெரிகிறது. இதனால், ஆசிரியர் பதற்றமடைந்ததால், ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டது.
இதேபோல், பரப்பனங்காடி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் வாட்ஸ்அப் குழுவுக்குள் ஊடுருவிய மர்ம நபர்கள் சிலர் தொடர்ச்சியாக ஆபாச படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.