புது தில்லி:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். இதனை வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிபர் பிரதமர் மோடியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய பிரதமர் நரேந்தி மோடியும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பும் வியாழக்கிழமை (பிப்,8) தொலைபேசியில் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களைத் தொடர்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், மாலத்தீவில் ஜனநாயக ரீதியான நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டும், நீதித்துறையின் அதிகாரம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப் பட்டது. ஆப்கன் பாதுகாப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து செலுத்தவ முடிவு செய்யப்பட்டது. வடகொரியாவில் அணு ஆயுதக் குறைப்பை உறுதி செய்ய ஆலோசனை நடத்தினார் டிரம்ப்.
அடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு முழு குடியுரிமை இல்லாத நிலையில், அங்கே பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. ரோஹிங்க்யா அகதிகளின் நிலைப்பாடு குறித்தும் இருவரும் கருத்துக்களை பரிமாறினர். – இவ்வாறு வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இதனிடையே பிரதமர் மோடி இன்று பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.