ஐபிஎல் 2022 – 20 ஏப்ரல் 2022 பஞ்சாப் vs டெல்லி
– K.V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, ஏப்ரல் இருபதாம் நாள் பஞ்சாப், டெல்லி அணிகளுக்கிடையே மும்பையின் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 32ஆவது போட்டி நடந்தது. பஞ்சாப் அணி (115, ஜிடெஷ் ஷர்மா 32, மயங்க் அகர்வால் 24,) டெல்லி அணியிடம் (10.3 ஓவரில் 119/1, வார்னர் 60*, ப்ருத்வி ஷா 41) தோற்றுப்போனது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால் இந்தப் போட்டியில் அந்த அணி விளையாட முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்தது. போட்டி அதனால் இடம் மாற்றப்பட்டு புனேவிற்குப் பதிலாக மும்பையில் நடந்தது. ஆனால் ஆட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை, மைதானத்திற்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வரவில்லை. அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட எல்லாமே சரியாக நடந்தன. அவர்கள் டாஸ் வென்று, பஞ்சாப் கிங்ஸை 115 ரன்களுக்கு அவுட்டாக்கினர், மேலும் 10.3 ஓவர்களில் அதை சேஸ் செய்து விரைவாக தங்கள் அறைகளுக்குத் திரும்பிவிட்டனர்.
பஞ்சாப் கிங்ஸ், இந்த ஐபிஎல்லில் எந்த அணியை விடவும் அதிக முறை டாஸ்களை இழந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் அவர்கள் பேட்டிங் செய்தபோது விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன – லலித் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோருக்கு தலா இரண்டு விக்கட்.
காயத்தால் சென்ற ஆட்டத்தைத் தவறவிட்ட மயங்க் அகர்வால் இன்று ஆடினார். அவர் மூன்று ஓவர்களில் மூன்று பவுண்டரிகளை அடித்தார். கிங்ஸ் அணி மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் ஒரு ஓவருக்கு ஒன்று என நாலு, ஐந்து, ஆறு, ஏழாவது ஓவர்களில் முறையே ஷிகர் தவான், மாயங்க், லிவிங்ஸ்டோன், பேயர்ஸ்டோ ஆகியோர் ஆட்டமிழந்தனர். தமிழக வீரர் ஷாருக் கான் இன்றும் சோபிக்கவில்லை. 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் ஆனதால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டையும் இழந்து 115 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இலக்கு ஒருபோதும் கேப்பிட்டல் பேட்டர்களை சோதிக்கும் அளவிற்கு இருக்கவில்லை. ஆனால் அதற்காக அவர்கள் நிதானமாக ஆடப்போவதில்லை என்பதை முதல் ஓவரிலேயே தெரியப்படுத்தினார்கள். முதல் ஓவரில் 14 ரன், 2ஆவது ஓவரில் 12 ரன்.
அதன் பின்னர் வரிசையாக 17, 15, 17, 6, 3 ரன்(ஓரு விக்கட்), 8, 12, 9, மூன்று பந்துகளில் 6 என எடுத்து எளிய வெற்றியைப் பெற்றனர். பிரித்வி ஷா போலவும் வார்னர் போலவும் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கும்போது ஆட்டத்தை விரைவில் முடிக்க வேண்டியதுதானே.