புது தில்லி:மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று கூறப் படுகிறது.
மத்தியில் ஆளும் தே.ஜ.கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி தயாராகி வருகிறது.
ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாகவும் அறிவித்தார். ஏற்கெனவே, தெலங்கானா ராஷ்டிரீய சமிதி உள்ளிட்ட கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து பேசி வந்தன.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், அதை அதிமுக ஆதரிக்கும் என்று முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஆதரிப்பது என்று அதிமுக., முடிவு செய்துள்ளதாக, அதிமுக., முன்னாள் எம்.பி., கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்று அவர் கூறினார்.
தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஆந்திர, தெலங்கானா மாநிலக் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள உள்ளார் என்று கூறப் படுகிறது. நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த நோட்டீஸ் கொடுத்துள்ளது. பொதுவாக, இது போன்ற நோட்டீஸ் மீது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டுமானால், அவையின் 50 எம்.பி.க்களின் ஆதரவு குறிப்பிடப் பட வேண்டும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நோட்டீஸ் மீது தெலுங்கு தேசமும் ஆதரவளிக்கக் கூடும். தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது.