காங்கிரஸ் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ராகுல்காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் கடந்த 17-ந் தேதி கட்சியின் காரிய கமிட்டியை மாற்றியமைத்தார். திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவேதி, கமல்நாத், சுசில்குமார் ஷிண்டே, கரண் சிங் போன்றோர் விடுவிக்கப்பட்டு புதிய காரிய கமிட்டிக்கு 23 உறுப்பினர்கள், 18 நிரந்தர உறுப்பினர்கள், 10 சிறப்பு அழைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதிய காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாக இணைப்பு கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அகமது பட்டேல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் முதல்-மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
நேற்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த உத்திகளும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும், பின்பும் கூட்டணி அமைப்பது மற்றும் தேர்தல் பிரசார குழுவை அமைப்பது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை ராகுல்காந்திக்கு வழங்க காரிய கமிட்டி ஒப்புதல் அளித்தது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது பார்வையற்ற வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக ‘பிரைலி எபிக்’ அட்டை முறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்திருந்தது.
இதற்கு பாராட்டு தெரிவித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத்துக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிப்பதை எளிதாக்கிட கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று கூறி உள்ளார்.



