
இங்கிலாந்து இந்தியா டி-20 தொடர்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து இந்திய அணிகளில் டி-20 தொடர் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. இதற்கு முன்னர் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு டி-20 ஆட்டங்கள் ஆடியது. இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் இரண்டு ஆட்டங்களிலும் சரியாக விளையாடவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை ஆடவைக்கவேண்டும் என கருத்து எழுந்தது.
முதல் ஆட்டம் இங்கிலாந்தில் செஸ்டர்-லே ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. டாஸ் வென்று, இந்திய அணி முதில் மட்டையாடியது. தொடக்கவீரர் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் பூஜ்யம் ரன்னுக்கு ரன் அவுட் ஆனார். அபிஷேக் ஷர்மா 59 ரன்னும் (24 பந்துகள்), ஷ்ரேயாஸ் ஐயர் 68 ரன்னும் (47 பந்துகள்) ஷிவம் துபே 42 ரன்னும் (ஆட்டமிழகாமல், 21 பந்துகளில்) அடித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. இதன் பின்னர் ஏற்பட்ட மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
இரண்டாவது ஆட்டம், மான்செஸ்டரில் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்றது. பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடியது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அவர் 10 பந்துகளில் 14 ரன் (2 சிக்சர்கள்) அடித்து ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் 43 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (22 பந்துகளில் 37 ரன்), இஷான் கிஷன் (40 பந்துகளில் 49 ரன்), திலக் வர்மா (11 பந்துகளில் 24 ரன்) நன்றாக ஆடினர். ஷிவம் துபே (5 ரன்) திலக் வர்மாவிற்கு முன்னதாக களமிறங்கினார்; ஆனால் சோபிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 190 ரன் அடித்தது.
இரண்டாவதாகக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி மட்டையாளர்கள் பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் ரன் எடுக்காமல் முதல் ஓவரில் அர்ஷதீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஹாரி ப்ரூக் (39 ரன்), ஜேகப் பெதல் (76 ரன்), டாம் பேண்டன் (39 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 191 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார். அதற்கடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் மற்றொரு சிக்சர் அடித்தார். நான் காவது பந்தில் ஒரு ஃபோர் அடிக்கப்பட்டது. ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. இந்த ஓவரில் மொத்தம் 29 ரன்கள் அடிக்கப்பட்டது.
ஐந்து ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் மூன்றாவது ஆட்டம் நாட்டிங்ஹாமில் நாளை நடைபெறுகிறது.




