
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை இன்று வந்தடைந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகஸ்ட் 14 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா ஆக 14ஆம் தேதி காலை சிறப்பாக நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் மங்களப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது.
இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்தன்று நடைபெறும் தேர் திருவிழாவின் போது ஆண்டாளுக்கு மரியாதையாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மஞ்சள் குங்குமம் சந்தனம் வளையல் பழங்கள் தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருள்கள் கொண்டு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்களப் பொருட்கள் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அதிகாரியும் இணை ஆணையுருயமான சிவ ராம்குமார் தலைமையில் குழுவினர் மங்களப் பொருட்களை நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கொண்டு வந்து, மாட வீதிகள் வழியே மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாளிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலை மதுரை அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மரியாதைகளை கள்ளழகர் திருக்கோவில் அதிகாரிகள் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
முன்னதாக, ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் சார்பில் வஸ்திர மரியாதை சீர் பொருள்கள், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீரங்கங்கத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு, ஶ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, ஆண்டாளுக்கு அரங்கத்தின் சார்பில் வழி அனுப்பி வைத்தனர்.


