
பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அன்வர்தீன் சிறையில் மர்ம மரணம் விவகாரத்தில், முக்கிய குற்றவாளிகளை பாதுகாக்க சதி நடக்கிறதா எனும் சந்தேகம் எழுகிறது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தரவேண்டி அப்பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு சமூகத்தினரும் பக்தர்கள் மற்றும் காவடி குழுவினர் தங்கி இளைப்பாறவும் பழனி முருகனை தரிசிப்பதற்கும், தங்களின் சொந்த நிலங்களை கோவிலுக்கு எழுதி வைத்து பக்தர்களுக்கு சேவை செய்து வந்துள்ளனர்.
இந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை முறைகேடாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்துள்ள வழக்கில் முருகதாஸ், அன்வர்தீன், சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய நான்கு பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நில மோசடிப் புகாரில் பலர் மூளையாக செயல்பட்டுள்ளனர்என்றும்,
நில மோசடிக்காக ஒரே நாளில் பல அதிகாரிகள இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்து முன்னணி சார்பாக கூறியிருந்தோம்.
அது மட்டுமல்லாமல் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் அப்பொழுதுதான் நிலமோசடி குறித்த உண்மைத்தன்மை வெளியே வரும் என்றும் சொல்லியிருந்தோம். இதற்காக இந்து முன்னணி சார்பாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதமும் நடைபெற்றது.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்ற நிலையில் நில புரோக்கரும் பத்திர எழுத்தாளருமான ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3ஆம் தேதி அன்று இந்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டனின் முன்ஜாமின் காலம் முடிவு பெற்றதால் நான்காம் தேதி மீண்டும் முன்ஜாமின் கேட்க அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடிக்கு உடனடியாக இருந்த அனுமதியின் நேற்று மத்திய சிறையில் மரணமடைந்துள்ளார் அவர் நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்ததாக கூறப்படுகிறது..
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது அன்வர்தீனுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.
இத்தகைய நோய்கள் உடையவர்கள் நீதிமன்றத்தில் இது பற்றி தகவல் தெரிவித்து முன்ஜாமின் அல்லது ஜாமின் பெற முடியும்.
ஆனால் அவர் இறந்த பிறகு அவருக்கு மருத்துவ ரீதியாக இவ்வளவு பிரச்சினைகள் என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது தான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இந்த நலமோசடி வழக்கில் 11 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் .
இதில் இதுவரை ஆறு நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் மிக முக்கிய குற்றவாளிகள் இதன் பின்னணியில் இருப்பதால் அன்வர்தீனின் சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது . முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்காக அன்வர்தீன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கை திசை திருப்புவதாக அமையும்.
எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

