லஞ்சம் பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. கடந்த 1988ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில் 43 திருத்தங்களை மேற்கொண்ட மத்திய அரசு, அதற்கான சட்ட திருத்த மசோதாவை கடந்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்தில் மத்திய பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறுகையில், “பிரதமர் மோடி அரசு ஊழலை துளி அளவு கூட சகித்துக் கொள்ளாது என்பதை இந்த சட்ட திருத்தம் பிரதிபலிக்கிறது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதுடன், சட்டமும் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் விரைந்து விசாரணை முடிக்கவும் இச்சட்டதிருத்தம் உதவும்” என்றார். இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் படி, இனி லஞ்சம் வாங்குபவர் மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் தண்டனை வழங்கப்படும். லஞ்சம் கொடுத்தால், குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு தண்டனை வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.

