
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில், 108 திவ்ய தேசத்தில் ஒன்றான, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வைணவ திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நின்ற நாராயணப்பெருமாள் சமேத – செங்கமலத்தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நடப்பாண்டிற்கான ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 25- ம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தி, தீபாரதனையோடு,கருட கொடியேற்றத்துடன்
தொடங்கி நடந்து வருகிறது.
பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவுநின்ற நாராயணப்பெருமாள் சமேத – செங்கமலத்தாயார் சர்வ அலங்காரத்துடன் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்மம்,சேஷம், கருடன், அன்னம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆனித் தேரோட்ட திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் அதி விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திரு தேரில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் செங்கமலத்தாயார் எழுந்தருள தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.
தேரோட்டத்தில் பங்கேற்ற பெண் பக்தர்கள் ஆன்மீகப் பாடல்கள் பாடியபடியே கோலாட்டத்துடன் கும்மியடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோபாலா! கோவிந்தா!! என்ற சரண கோஷத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.




