
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உத்ஸவத்தின் நான்காம் திருநாள் ஸ்ரீ ஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும், ரங்க மன்னார் கண்ணன் திருக்கோலத்தில் கோவர்த்தனகிரி வாகனத்திலும் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான திவ்ய தேசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது. இங்கு அவதரித்த ஆண்டாளின் திருநட்சத்திரமான திரு ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு திருஆடிப்பூர உத்ஸவம் கடந்த 06.08.2026 அன்று கொடியேற்றப்பட்டு துவங்கியது.
06.08.2026 முதல் 14.08.2026 வரை உத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த உத்ஸவ காலங்களில் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக 4ம் திருநாள் ஸ்ரீ ஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்க மன்னார், கண்ணன் திருக்கோலத்தில் கோவர்த்தனகிரி வாகனத்திலும் எழுந்தருள சிங்கமாள்புரம் மண்டபத்தில் இருந்து திருவீதி உலா முக்கிய வீதிகளில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருநாளான நாளை நள்ளிரவில் ஐந்து கருட சேவையும், ஏழாம் திருநாள் இரவு சயன சேவையும் மற்றும் ஒன்பதாம் திருநாள் ஆடிப்பூரத்தன்று ( 14.08.2026 )ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.35க்கு மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

