
ஆடி அமாவாசைத் திருவிழாவையொட்டி சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது தாணிப்பாறை பீட் ஆகும். இங்கு கடந்த ஆக.,10 இல் காட்டுத் தீ பரவியது. இதனால் பக்தர்கள் ஆக.,11 இல் தாணிப்பாறை வழியாக அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வனத்துறையால் தடை விதிக்கப்பட்டது.
தற்போது காட்டுத் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. எனவே, ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு ஆக.,12,13 ஆகிய இருநாட்கள் மட்டும் பக்தர்கள் தாணிப்பாறை வழியாக மட்டும் அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது – என அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட தணிப்பாறைப் பகுதியில் 10.08.2026 நேற்று, காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து, இத்தீ மலையின் கீழ்ப் பகுதியை நோக்கிப் பரவி வந்தது; தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் வீசும் காற்றின் வேகம், திசை மற்றும் சூழலைத் கண்காணிக்கும் பணியில் களப்பணியாளர்கள் ஈடுபட்டனர் .
தீ பரவிய சூழலில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, நிலைமை பாதுகாப்பானதாகவும் இயல்பானதாகவும் மாறும் வரை, 11.08.2026 வரை பொதுமக்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தொடர்ந்து எரிந்த தீ மற்றும் கள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, 11.08.2026 காலை 08:00 மணிக்கு முன்னதாக பக்தர்கள் அல்லது பார்வையாளர்கள் சதுரகிரி மலைப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், நுழைவு நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை, அப்பகுதியில் நிலவும் தீயின் தீவிரம் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலையைப் பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

