
சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுவோம் வாருங்கள், அழைக்கிறார் மோதிஜி
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுங்கள், தேசியக் கொடியுடன் செல்ஃபி படம் வெளியிடுங்கள் என்று, பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
‘ ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’ எனப்படும் , ‘ ஹர் கர் திரங்கா’ என்ற இயக்கத்தை மத்திய கலாசார அமைச்சகம் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்தது . அது முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.
தற்போது, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது இந்தியர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…
வாருங்கள், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று, கோலாகலம் உற்சாகத்தோடு கொண்டாடுவோம். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிரத்தாஞ்சலிகளை சமர்ப்பிப்போம். வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான உறுதிப்பாட்டை மேற்கொள்வோம். வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி. அனைத்து வீடுகளிலும் மூவண்ணக்கொடி. அனைத்து மனங்களிலும் மூவண்ணக்கொடி. வாருங்கள், அனைத்து வீடுகளிலும் மூவண்ணக்கொடி பறக்க விடுவோம்.
என்று குறிப்பிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் . மேலும் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டைக் கொண்டாடும் வகையிலும், நாட்டின் பெருமை , ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

