புது தில்லி: வடமாநிலங்களில் என்.ஐ.ஏ., நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் 10 பேர் கைது செய்யப் பட்டனர்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்திட்டத்தை பின்பற்றி, இந்தியாவில் முக்கியத் தலைவர்களைக் கொல்வதற்கும் சில இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்துவதற்கும் திட்டம் தீட்டி, பயங்கர நாசவேலைகளை நிகழ்த்துவதற்காக ஆயுதங்களைத் திரட்டி வந்திருந்த பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் லக்னௌ உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தியதில், 25 கிலோ வெடிபொருட்கள். ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன!
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் மீதான ஈர்ப்பால், அதே போன்று இந்தியாவில் செயல்பட ஒரு பயங்கரவாதக் குழுவை இஸ்லாமிய பயங்கரவாத கும்பல்களைச் சேர்ந்த சிலர் உருவாக்கி உள்ளதாகவும், அவர்கள் வட இந்தியாவில் உத்தரப் பிரதேசம் தில்லி உள்ளிட்ட இடங்களில் தாக்குதலை நடத்த உள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ.,வுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் உஷார் அடைந்தனர்.
ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற பெயரில் அந்த இஸ்லாமிய கும்பல் 6 மாதங்களுக்கு முன்னர் அமைப்பு ரீதியாக செயல்பட தொடங்கியதாக தெரியவந்ததை அடுத்து, இந்த கும்பலைப் பிடிக்க என்.ஐ.ஏ தீவிரமாக செயல்பட்டது. இதன்படி, புதன்கிழமை இன்று காலை தில்லி, உபி., ஆகிய பகுதிகளில் 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இணைந்து சிபிஐ., மற்றும் உபி.,யின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர்.
பல மணி நேர சோதனைக்குப் பின்னர், அந்தக் குழுவின் தலைவன் எனக் கருதப்படும் முஃப்தி சோஹைல் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். உபி.,யில் உள்ள அம்ரோகாவில் 5 பேரும், வடகிழக்கு தில்லியில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு மாதங்களாக செயல்பட்டு வரும் இந்த பயங்கரவாதக் குழுவில் 16 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப் படுகின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடமிருந்து 25 கிலோ வெடி பொருட்கள், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கிகள், 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள், லேப்டாப், மெமரி கார்டுகளுடன் ஏழரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.