ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று, ஆந்திராவில் வாக்குறுதியை அள்ளி வீசி அசரவைத்துள்ளன அங்குள்ள அரசியல் கட்சிகள்!
ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, உங்கள் எதிர்காலம் என் கடமை என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
மாதம் மூவாயிரம் ரூபாய் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வயது உச்ச வரம்பு 65 லிருந்து 60 ஆகக் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சந்திரண்ணா காப்பீடு திட்டத்தின் உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இலவசமாக 12 மணி நேர மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என அவரது தேர்தல் அறிக்கை கூறுகிறது.
அதேபோல்… ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில், இளநிலை வழக்கறிஞர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை, 100 கோடி ரூபாயில் வழக்கறிஞர்கள் நலநிதி உருவாக்கம் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு முதலீடாக ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இயற்கையாக இறந்தால் அவர்களுக்கு ஒய்.எஸ்.ஆர். ஜீவன் பீமா பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்த இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான அம்சங்கள் பல இருக்கின்றன. இலவசம், தள்ளுபடி என எல்லாம் இருந்தாலும், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை.