பின்னணிப் பாடகி ஜானகிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்ட நிலையில், அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல இந்திய மொழி திரப்படங்களிலும் கடந்த 60 ஆண்டுகளாகப் பாடி வருகிறார் ஜானகி. மிகச் சிறந்த பின்னணிப் பாடகியாக திகழ்ந்து வரும் ஜானகி அண்மையில், மைசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது கால் இடறிக் கீழே விழுந்தார். இதில் ஜானகிக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.
இந்நிலையில், ஜானகி உடனடியாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து, எலும்பு முறிவை சரிசெய்ய ஜானகிக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஜானகிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார் ஜானகி.
தனக்கு மேற்கொள்ளப் பட்ட அறுவை சிகிச்சை குறித்து ஜானகி கூறிய போது, கர்நாடக மக்கள் என் மீது எப்போதும் அன்பை வாரி வழங்குகிறார்கள். எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இப்போது நான் நலமுடன் உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.