எங்குப் பார்த்தாலும் மழை, வெள்ளம். நிலச்சரிவு மாநிலமே துயரத்தைச் சந்தித்து வருகிறது. பெருமழையைவிட நிலச்சரிவுதான் இந்தமுறை கேரள மக்களை வாட்டிவதைத்து வருகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா, வயநாட்டில் உள்ள புதுமலா என இரண்டு கிராமங்கள் மண்ணில் புதையுண்டு இன்றோடு மூன்று நாள்களுக்கு மேலாகிறது. இதில் சிக்கியிருக்கிறவர்களின் நிலை என்னவென்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் பெருமழை பெய்ய கீத்துவும், ஒன்றரை வயது மகன் துருவுடன் வீட்டின் உள்ளே இருந்தனர். தாய் சரோஜினியுடன் சரத் வெளியே இருந்தார். அப்போது மழையோடு சேர்த்து கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மூன்று நாள்களுக்கு பிறகு, இன்று கீத்து மற்றும் துருவ்வின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கீத்து தனது மகன் துருவை மார்போடு அணைத்தபடியே இறந்து கிடந்தது, மீட்புக் குழுவினரையும் அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. சரத்தும் கீத்துவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு கீத்துவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். துருவ் பிறந்த பிறகு குடும்பத்தினரின் கோபம் தணிந்துள்ளது. இதனால் இருவரையும் மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர் கீத்துவின் குடும்பத்தினர்.
#KeralaFloods
Scary visuals of a live land slide in Kottakunnu area of #Malappuram district. This Friday incident captured on CCTV is enough to show what people of God’s own country are actually facing.@indiatvnews pic.twitter.com/HQ60p3rxWW— T Raghavan (@NewsRaghav) August 10, 2019
ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோக சம்பவம் நிகழ அந்த இடத்துக்கு ஓடியுள்ளனர் கீத்துவின் பெற்றோர். தன்குழந்தையை மார்பில் அணைத்தபடி உயிரிழந்ததை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். `எங்கள் மகள் மீது அதிகமான பாசம் வைத்திருந்தோம். அதனால்தான் அவள் காதல் திருமணம் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் குழந்தை பிறந்தது எனத் தெரிந்ததும் அவர்களை வீட்டுக்கு அழைக்க முடிவு செய்திருந்தோம். கடைசியில் கீத்துவை சடலமாகத்தான் பார்க்க முடிந்தது” எனக் கண்ணீர் வடிக்கிறார்கள்.