தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி(வயது 35). என்பவரின் மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு ஷோபனா (13), லாவண்யா (11), ஹரீஸ்(9), ஸ்ரீமதி(7), குணசேகரன்(5) என்ற 5 குழந்தைகள் உள்ளனர்.
பாண்டிக்கும், ரேணுகாதேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒர் ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாண்டிக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறது. நேற்று ரேணுகாதேவியின் சகோதரர் ஒருவர், குழந்தைகளைக் கூட கவனிக்காமல் இவ்வாறு பொறுப்பில்லாமல் இருக்கிறாயே என பாண்டியிடம் கேட்டுள்ளார்.
அப்பொழுது போதையில் இருந்த பாண்டி கோபம் அடைந்து தனது மகள்கள் 11 வயதான லாவண்யா, 7 வயது ஸ்ரீமதி இருவரையும் அந்த பகுதியில் உள்ள அரசலாற்றில் தூக்கி வீசி உள்ளார்.
பின் வீட்டுக்கு சென்று மனைவி ரேணுகாதேவியிடம், தான் 2 மகள்களையும் ஆற்றில் தூக்கி போட்டுவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த ரேணுகாதேவி கதறி துடித்து அழுதபடி அக்கம் பக்கத்தினரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஆற்றுக்கு ஓடிச்சென்று பார்த்துள்ளார்..
அப்போது லாவண்யா மட்டும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். மற்றுமொரு குழந்தை ஸ்ரீமதியை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடி வருகின்றனர். இன்று காலையிலும் தேடும் பணி நடந்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.