12 ஆண்டுகளுக்கு பின்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில்
மகா கும்பாபிஷேகம்:
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகும். வேண்டுவோருக்கு வேண்டு வரம் அளித்து வருவதாலும், தீராத நோய்களை தீர்த்து வருவதாலும் பக்தர்கள் அதீத நம்பிக்கை கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலும் இருந்து வருகிறார்கள்.
கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. அரசு ஒதுக்கிய ரூ.25 கோடியிலும், பக்தர்கள் நன்கொடையாலும் பணிகள் வேகமாக நடந்தன.
இதில் புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, கோவிலில் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகளுக்குப் பின், இன்று குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது
200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, காலை 7 மணியளவில் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் பக்தர்கள் மீது தெளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.