‘மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயை தேசபக்தர்’ எனக் கூறினார் என்று கூறி, காந்தியை அவமானப் படுத்திவிட்டதாக பாஜக., பெண் எம்.பி., சாத்வி பிரக்யா தாக்குர் மன்னிப்பு கோர வலியுறுத்தி அவையை எதிர்க்கட்சிகள் முடக்கிய நிலையில், இன்று காலை அவையில் தாம் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவர் கூறியுள்ளார்.
எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து புதன்கிழமை மக்களவையில் விவாதம் நடந்தது. அப்போது, மஹாத்மா காந்தியைக் கொன்றது ஏன் என கோட்சே கூறியதை மேற்கோள் காட்டி, தி.மு.க. உறுப்பினர் ஆண்டிமுத்து ராஜா பேசினார்.
அந்த விவாதத்தில் குறுக்கிட்ட பிரக்யா தாக்குர், ‘தேசபக்தரை இத்தகைய உதாரணத்துக்கு மேற்கோள் காட்டக் கூடாது என்று கூறினார். இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரக்யா தாக்குர் மன்னிப்பு கோராத வரை அவரை அவைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில் தமது கருத்து தவறாக திரித்துக் கூறப் பட்டுள்ளது என்று கூறி, சாத்வி பிரக்யா தாக்குர் இன்று மன்னிப்பு கோரினார்.
மக்களவையில் அவர் இது குறித்துப் பேசிய போது, நாடாளுமன்றத்தில் நான் பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது. நாட்டு விடுதலையில் மஹாத்மா காந்தியின் பங்களிப்பை நான் மதிக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்னை பலிகடா ஆக்கியுள்ளன. ராகுல் ஒரு பெண்ணை அவமதித்துள்ளார் என்று கூறினார்.
மேலும், என்னை தீவிரவாதி என குறிப்பிட்ட ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! எந்த ஆதாரமும் இன்றி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியது எனது கண்ணியத்தை பாதித்துள்ளது என்று பாஜக எம்பி பிரக்யா தாக்குர் கூறினார்.
இருப்பினும், பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர விரும்பாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.