குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகரில், அடுத்தவர் வீடுகளின் வாசல்களில் கோலம் போட்டு, தேசவிரோதக் கருத்துகளை எழுதிய பெண்களில் ஒருவர், பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டிச.29ஆம் தேதி, சென்னை பெசன்ட் நகரில் சாலை மற்றும் வீடுகளின் முன்னர் கோலம் போடும் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாசகங்களை எழுதியிருந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட காயத்ரி(32), ஆர்த்தி(32), பிரகதி(28), கல்யாணி(23) மற்றும் மதன்குமார்(20) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், பின்னர் ஒரு மணி நேரத்தில் விடுவித்தனர். அடுத்து அவர்கள் அனைவரும் திமுக., தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பை நிகழ்த்தி, தங்களது பின்னணியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தொடர்ந்து, திமுக., இந்தக் கோல விவகாரத்தை பெரிதாக்கியது. ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கருத்துப் பதிவிட்டார். தொடர்ந்து கனிமொழி தனது வீட்டில் கோலம் போடுவதாகக் கூறி, அதற்குக் கூட உரிமையில்லையா என்ற அளவில் கருத்து வெளியிட்டார். இந்தக் கருத்துகள், திமுக.,வினரின் ஊடகத் தொடர்பாளர்கள் மூலம் ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக்கப் பட்டது. மேலும் திமுக.,வின் ஐ.டி.பிரிவு மூலம் சமூக ஊடகங்களிலும் இது குறித்து கருத்துப் பரப்ப திமுக.,வினர் ‘ஊக்க’ப் படுத்தப் பட்டனர்.
கோல விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதுகுறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், கோலப் போராட்டம் நடத்தப் போவதாக காயத்ரி என்ற பெண்ணும் சிலரும் அனுமதி கேட்டதாகவும், போலீஸார் அதற்கு அனுமதி மறுத்ததாகவும் கூறினார். மேலும், அவர்கள் அனுமதி இன்றி ஏழு எட்டு கோலம் தெருக்களில் போட்டதாகவும், ஒரு வீட்டில் இவ்வாறு கோலம் போட்ட போது, அந்த வீட்டில் இருந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் போலீஸாரை அழைத்ததாகவும், அதன் பின்னரே இந்தப் பெண்கள் கைது செய்யப் பட்டதாகவும் கூறி, அதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்ரி கந்தாடை என்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு ஆராய்ச்சியாளராக இருப்பதாக அவரின் பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். மேலும், அவர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதால், அதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது என்று கூறினார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
இதே கோலக் குழுதான், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினால் தூண்டப் பட்டு, தெருவில் களம் இறங்கிய குழு என்பதும், இந்தப் பெண்களை தெருவில் இறக்கி விட்டு அரசியல் செய்த பின்னரே, ஸ்டாலினும் கனிமொழியும் கோலமாவு அரசியலில் தீவிரமாக இறங்கினர் என்பதும் பாகிஸ்தானின் தொடர்பு திமுக.,வுக்கு எப்படி உள்ளது என்பது அப்பட்டமாகத் தெரியவந்திருப்பதாக சமூகத் தளங்களில் கொட்டித் தீர்க்கின்றனர்.
உண்பதும் பாதுகாப்பாக உறங்குவதும் இந்திய மண்ணில், ஆனால் அடியாள் வேலை பார்ப்பது பாகிஸ்தானுக்கு! சொந்த நாட்டை சீரழித்து பாகிஸ்தான் காரனுக்கு நாட்டைப் பிடித்துக் கொடுப்பதில் அப்படி என்னதான் டீலிங் வைத்திருக்கிறீர்களோ என்று சமூகத் தளங்களில் பொங்கித் தீர்ப்பவர்களுக்கு திமுக.,விடம் நிச்சயம் பதில் இருக்காது!