காலிப்ளவர் சப்பாத்தி (கோபி பரோத்தா)
தேவையான பொருட்கள்:
சிறிய காலிபிளவர் -1
கோதுமை மாவு -2 கப்
சீரகம் -1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் -5
உப்பு -தேவையான அளவு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
கொத்தமல்லி -ஒரு கப்
எலுமிச்சைச்சாறு -1 டீஸ்பூன்
செய்முறை:
காலிபிளவரை அலம்பிக் கொண்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் தண்ணீர் விடாமல் திரித்துக் கொள்ளவும். பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். இல்லையென்றால் அதையும் துருவிக் கொள்ளலாம்.
துருவிய காலிபிளவர்,பச்சைமிளகாய்,சீரகம்,உப்பு,மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி விடவும்.
சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசையவும்.
ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பிசைந்த மாவை மூடி வைத்து விடவும். பிறகு உருண்டைகளாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக்கல்லில் போட்டு வேக விடவும். திருப்பிப் போட்டு வேக விடவும்.
அடிக்கடி திருப்பிப் போட வேண்டும். பிறகு எண்ணெய் விட்டு 2,3 முறை திருப்பிப் போட்டு விட்டுத் தட்டில் போடவும்.
இன்னொரு முறை:
காலிபிளவரைத் துருவிக் கொண்டு அதனை ஒரு வாணலியில் உப்பு, மஞ்சள் தூள்,கரம் மசாலா,காரப்பொடி சேர்த்து வதக்கி இந்த மசாலாவைச் சப்பாத்தி மாவை இடும் போது உள்ளே வைத்து இட்டாலும் சுவை நன்றாக இருக்கும். ஈரம் இருந்தால் பிழிந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் சப்பாத்தி இட வராது.
இதை வதக்காமல் பச்சையாகவும் செய்யலாம், வட இந்தியர்களின் முறையும் அதுவே. காலிபிளவரைத் தண்ணீரின்றிப் பிழிந்து விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் சேர்ந்து சப்பாத்தி மாவினுள் வைத்துச் செய்வர்.
குறிப்புக்கள்:
காலிபிளவரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உப்பு கலந்த சுடுதண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அதிலுள்ள கிருமிகள் அழிந்து விடும்.பிறகு ஈரம் போகத் துடைக்க வேண்டும்.
சத்து மிகுந்த காலிபிளவர் சப்பாத்தியை சைட் டிஷ் ஏதும் இன்றியே உண்ணலாம். மாவைப் பிசைந்து ஊற வைப்பதால் படு மென்மையாக வரும்.