கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் 149வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே கோலாகலமாக நடைபெற்றது.
ஏழு திரைகள் நீக்கப் பட்டு, ஜோதி தரிசனம் காண்பிக்கப் பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ஜோதி தரிசனம் கண்டு மகிழ்ந்தனர்.
கடலுார் மாவட்டம் வடலுாரில், ராமலிங்க அடிகளார் – வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப் பூசத்தை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இன்று காலை 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப் பட்டு, முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 க்கு என ஆறு காலம் இதுபோன்று, 7 திரைகள் நீக்கப் பட்டு, ஜோதி தரிசனம் காட்டப்படும்.
ஜோதி தரிசனத்தைக் காண வரும் பக்தர்களுக்காக கூடுதல் பேருந்துகள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப் பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, கடலுார் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும், மதுக் கடைகள், இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.