தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் இன்று தூக்கு கயிற்றில் தொங்கும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில்
அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி,
திப்-மீனாட்சிபுரம், கொண்டலூர், பூவனூர், ஆரியங்காவூர், நாட்டார்பட்டி
உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை
காட்டி வருகின்றனர்.
5வது நாளான திங்கள் கிழமை போராட்டக்காரர்கள் தூக்கு கயிற்றில் தொங்கும்
போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தென்காசி தாசில்தார் அனிதா நேரில்
வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடையை
மூடுவதற்கு கால அவகாசம் கேட்ட, தாசில்தாரின் வேண்டுகோளை போராட்டக்காரர்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை. கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என
தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு
சென்று நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார் இதற்கிடையே திப்பணம்பட்டி ஊர்
பொதுமக்கள் சார்பில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
முகாமில் மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு
அளித்துள்ளனர் .