அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நேற்று காலையில் மேலதாளம் முழங்க கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கபட்டு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
இதைதொடர்ந்து நூபுரகங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாரதனைகள் நடந்தது. இரவு அன்னவாகணத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.
இதைத் தொடர்ந்து இன்று திங்கள் கிழமை காலையில் தங்க பல்லக்கு உற்சவமும் இரவி சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்படும் நடைபெறும். நாளை 28ம் தேதி செவ்வாய் கிழமை வழக்கம் போல் நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்தில் புறப்பாடும் 29ம் தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 30ம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 31ம் தேதி வெள்ளி கிழமையன்று இரவு யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
ஆகஸ்ட் 1ம் தேதி இரவு புஷ்ப சப்பரமும், 2ம் தேதி ஞாயிறு கிழமை ஆடி 18ம் பெருக்கு விழாவும் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 3ம் தேதி திங்கள் கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழாவும் இரவு புஷ்ப பல்லக்கும், 4ம் தேதி செவ்வாய் கிழமை 10ம் திருநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக இந்த வருடம் கடந்த 20ம் தேதி ஆடி அம்மாவாசை நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டது.
ஆடிப் பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். நடைபெற்று வரும் திருவிழாவில் அரசு ஊரடங்கு தடை காலம் இருப்பதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை