கொரோனாவால் பாதிக்கப் பட்டு, உயிரிழந்த அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேலின் உடலை அருகே சென்றுகூடப் பார்க்க முடிய வில்லை என்று கூறி, அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் வீட்டின் பால்கனியில் இருந்தவாறே பார்த்து கண்ணீர் விட்டுக் கதறினர். இது, காண்போரை கண் கலங்க வைத்தது.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமமுக., பொருளாளரும் முன்னாள் அதிமுக., எம்.எல்.ஏ.,வுமான வெற்றிவே, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதை அடுத்து அவருடைய உடல் இன்று காலை 9 மணிக்கு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வாகனம் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதால், வெற்றிவேலின் உடல் வாகனத்தில் இருந்து கீழே இறக்கப்படவில்லை. எனவே தொலைவில் நின்றபடி, அவர்களது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு, வெற்றிவேலின் உறவினர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கொரோனா காரணமாக உயிரிழந்ததால் கட்சியினர் பெரும்பாலும் அஞ்சலி செலுத்த வரவில்லை. இருப்பினும் சிஆர் சரஸ்வதி உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் சிலர் மட்டும் அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெற்றிவேல் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை இருப்பினும் ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் வெற்றிவேல் படம் திறக்கப்பட்டு அதற்கு மலர் அஞ்சலி செலுத்தினார் டிடிவி தினகரன்.