மதுரை வாடிப்பட்டி அருகே அரசு மதுபானக்கடையில் காவலாளியை கொலைசெய்து கிணற்றில் வீசிய கொலையாளிகள் கைது செய்யப் பட்டனர். கொள்ளையடிக்க தடையாக இருந்ததால் காவலாளியை கை, கால்கள் கட்டப்பட்டு அடித்து கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஜெமினிபட்டியில்
அரசு மது பானக்கடை உள்ளது. இங்கு கடந்த மாதம் 20 ம் தேதியன்று இரவில் கச்சைகட்டியை சேர்ந்த காவலாளி கணேசன், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருகிலுள்ள தென்னந்தோப்பு கிணற்றுக்குள் கொலை செய்யபட்டு கிடந்தார். மேலும் கடையை துளையிட்ட மர்மநபர்கள் 10 மதுபான பாட்டில்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியில்
தனிப்படை போலீசார் வாகன சோதனை செய்த போது சந்தேகப் படும்படியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அலங்காநல்லூர் நேதாஜி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், மதுரை அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் செல்வகணபதி(19) என்றும், மதுரை மாவட்டத்தில் பல வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரியவந்ததாம். மேலும் கடந்த மாதம் வாடிப்பட்டி அருகே மதுபானக்கடை சுவரை துளையிட்டு மது பாட்டில்களை திருடியபோது காவலாளி கணேசன் தடுத்ததால், அவரை கொலை செய்ததாகவும், காவலாளி சத்தம் போடாமல் இருக்க ஆடு, மாடு திருடுவதற்கு பயன்படுத்தும் டேப்பால் வாயிலும் கை, கால்களிலும் கட்டி தூக்கி சென்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசிவிட்டு சென்றதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 17 வயது சிறுவனை இளஞ்சிறார் நீதிக் குழுமத்திலும், செல்வகணபதியை வாடிப்பட்டி நீதிமன்றத்திலும் போலீஸார் ஆஜர்படுத்தினர்.