நாடு முழுவதும் நேற்று முன்தினம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்றது. இதில் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், குழந்தைகள் பெற்றோருடன் சென்று ஆர்வமுடன் சொட்டுமருந்து போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் அளிக்கப்பட்ட மிக மோசமான சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள யவத்மாலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
இதில் 12 குழந்தைகளுக்கு ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்து எனக்கருதி சானிடைசர் அளித்துள்ளனர்.
அதன்பின்னர் தவறு நடந்ததை அவர்கள் உணர்ந்தனர். இதனையடுத்து உடனடியாக 12 குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு சானிடைசர் தந்த புகாரில் மருத்துவர் ஒருவர், 2 சுகாதார பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.