தென்னாப்பிரிக்க வகை கொரோனாவுக்கு எதிராக எதிர்பார்த்த பலன் இல்லை என்று கூறி, சீரம் தடுப்பூசியை அந்நாட்டு அரசு திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரசுக்கு பல்வேறு நிறுவனங்களுக்கும் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. அதில் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு பல்வேறு நாடுகளிலும் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைவிட ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகள் விலை குறைவு. அதேபோல ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளை சாதாரண பிரிட்ஜில்கூட சேமிக்கலாம் என்பதாலும் இந்தத் தடுப்பூசியையே பல வளரும் நாடுகளும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் புனேவிலுள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தியா உள்ளிட்ட அனைத்து வளரும் நாடுகளுக்கும் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. சீரம் தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கும் இலவசமாகவும் வணிக முறையிலும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி கடந்த வாரம் சீரம் நிறுவனத்தின் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பு வைக்கப்பட்டன. வரும் வாரங்களில் மேலும் ஐந்து லட்சம் தடுப்பூசி டோஸ்களுக்கும் தென்னாப்பிரிக்கா ஆர்டர் அளித்திருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அரசு 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை திரும்பி எடுத்துக்கொள்ள்பபடி சீரம் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டில் உருமாறிய கொரோனா வகை தான் வேகமாகப் பரவி வருகிறது. ஆக்ஸ்போராட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசி இந்த உருமாறிய கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிறிய சோதனையை நடத்தினர். அதில் சீரம் தடுப்பூசி தென்னாப்பிரிக்க வகை கொரோனாவுக்கு எதிராக சுமாராகவே பலன் அளிப்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசியை தென்னாப்பிரிக்க அரசு திரும்பி அளிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து தற்போது வரை சீரம் நிறுவனம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதுவரை பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை தென்னாப்பிரிக்க அரசு தொடங்கவில்லை. இருப்பினும், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை சுகாதார ஊழியர்களுக்கு அளிக்க தென்னாப்பிரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.