உடலுறவு கொள்ளாமல் காற்றினால் கர்ப்பம் தரித்ததாக கூறிய பெண்மணி ஒரு சில மணி நேரங்களில் குழந்தை பெற்றெடுத்திருக்கும் விநோத சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சியாஜூர் எனும் நகரத்தைச் சேர்ந்தவர் சிதி ஜைனா (வயது 25). கடந்த புதன் கிழமை பிரார்த்தனை செய்து விட்டு வந்த அமர்ந்திருந்த போது தனக்கு ஒரு அதிசயம் ஏற்பட்டதாகவும், காற்றினால் தான் கர்ப்பம் அடைந்தேன் எனவும் தெரிவித்ததுடன் அன்றைய தினமே பெண் குழந்தைக்கும் அவர் தாயார் ஆகியிருக்கிறார்.
இது எப்படி சாத்தியம் என ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த சம்பவம் குறித்த பின்னணியை சிதி ஜைனாவே விவரிக்கிறார்.
கடந்த புதன் கிழமையன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்து விட்டு வீட்டின் வரவேற்பறையின் தரையில் முகத்தை கீழே சாய்த்தவாறு படுத்திருந்தேன். திடீரென்று என் யோனி (பெண்ணின் பிறப்பு உறுப்பு) வழியாக காற்று என் உடலில் நுழைவதை உணர்ந்தேன். நான் இருந்த அறையில் பலமாக காற்று வீசியது. காற்று வீசிய 15 நிமிடங்கள் கழித்து என் வயிற்றில் வலி ஏற்பட்டது. அதன் பின்னர் தான் எனது வயிற்றினுள் ஏதோ பெரியதாக இருப்பதை உணர்ந்தேன். அன்றைய தினமே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தைக்கு தாய் ஆகியுள்ளேன், என் கர்ப்பத்திற்கு காரணம் உடலுறவு இல்லை ‘ என சிதி ஜைனா கூறியிருக்கிறார்.
சிதி ஜைனா கூறிய இந்த தகவல் மிகவும் ஆச்சரியம் தரும் விதமாகவும், விநோதமாகவும் இருந்ததால் அருகில் உள்ள பகுதிவாசிகளுக்கு இந்த தகவல் தீயாய் பரவியது. இது காவல்துறை அதிகாரிகளுக்கும் சென்றது.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன சிதி ஜைனாவுக்கு அவருடைய முன்னாள் கணவர் மூலமாக ஒரு குழந்தை உள்ளது. அவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வரும் போலீசார் சிதி ஜைனாவின் முன்னாள் கணவரிடம் விசாரித்து வருகின்றனர். திருமணத்திற்கு வெளியே ஏற்பட்ட உறவின் காரணமாக உருவாகிய குழந்தை குறித்து ஜைனா மறைத்திருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கின்றனர். இருப்பினும் இது மத கோட்பாடுகளை சார்ந்துள்ளதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தை பிறப்பு தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், தாயும், குழந்தையும் சுகமாக உள்ளனர். ஜைனாவின் கர்ப்பத்தைச் சுற்றியுள்ள மர்மம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தாலும், இது ரகசிய கர்ப்பத்தின் ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், பிரசவத்திற்குள் நுழையும் வரை தாய் தனது கர்ப்பத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார் என்பதே ரகசிய கர்ப்பம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தோனேசியாவில் கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளதாக Coconuts என்ற செய்தி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே போல சம்பவம் நடந்ததாகவும், 2017 ஆம் ஆண்டில், ஒரு கன்னி மூன்று மணி நேர கர்ப்ப காலத்திற்குப் பிறகு ஒரு ” குழந்தையை” பெற்றெடுத்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.