ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசத்தை வரும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், பர்மிட் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்.1-ம் தேதி முதல்தொடர்ந்து பல்வேறு கட்டமாக நீட்டித்து வருகிறது.
ஏற்கெனவே அறிவித்தபடி, மேற்கண்ட ஆவணங்களுக்கு இம்மாத இறுதிவரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாபரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், போக்குவரத்து ஆவணங்களுக்கான அவகாசத்தை மேலும்நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஆவணங்கள் அனைத்தும் புதுப்பிக்க ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.அன்பழகன் நேற்று கூறும்போது, ”கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், அனைத்து வாகனங்களையும் இயக்க முடியாத சூழல் உள்ளது.
இதனால்,போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க தற்போது அளிக்கப்பட்டுள்ள அவகாசத்தை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தோம்.
இதை ஏற்று, சலுகை காலத்தை மத்தியபோக்குவரத்து அமைச்சகம் நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.