உலக நாடுகள் அனைத்தும் 21ஆம் நூற்றாண்டில் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் பருவநிலை மாற்றம் ஆகும். இதற்காக பல நாடுகள் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு பருவநிலை மாற்றம் தொடர்பாக பல விழிப்புணர்வு திட்டங்களை நடத்தி வருகிறது.
மேலும் பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பல பிரபலங்களையும் தூதர்களாக நியமித்து வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார். இவர் மக்கள் மத்தியில் பருவநிலை மாற்றம் தொடர்பாக அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பதிவில் இவர் பருவநிலை தொடர்பான ஒரு அதிர்ச்சியான ஆய்வை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள் காட்டியுள்ளார். அதில் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்படும் ரசாயன மாற்றங்களால் புதிதாக பிறக்கும் ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் சிக்கல் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது பருவநிலை மாற்றம், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் ‘தாலேட்’ என்ற ரசாயனம் அதிகளவில் நுகரப்படுகிறது. இதனை கர்ப்பிணி பெண்கள் நுகர்வதால் அவர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பில் குறைபாடுகள் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு, “இனியாவது பருவநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாடு தொடர்பாக உலக நாடுகள் தீவிரம் காட்டும் ”எனக் கூறியுள்ளார். தியா மிர்சாவின் இந்த நக்கலான விழிப்புணர்வு பதிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Now maybe the world will take #ClimateCrises and #AirPollution a little more seriously? https://t.co/zSHfek3iWN
— Dia Mirza (@deespeak) March 26, 2021