வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தவறு செய்தால் முறைகேடு நடந்தால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை நாடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது,
செவ்வாய் கிழமை நடைபெறும் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வெற்றி பெற்றால், தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், வாக்கு எண்ணும் மைய அலுவலர்களிடம் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு வார்டு வாரியாக எண்ணி வெற்றி பெற்றவர்களை அறிவிக்க வேண்டும். பின்னர் வெற்றி படிவத்தை வழங்க வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்து வார்டுக்கு வாக்கு எண்ண வேண்டும்.
ஆனால், இப்போது அனைத்து வார்டு எண்ணிக்கை முடிந்த பிறகு வெற்றி பெற்றவர்களை அறிவிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகத் தெரிகிறது. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும். ஒவ்வொரு வார்டில் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ, அவர்களை வெற்றி பெற்றவர்களை அறிவித்து, வெற்றி படிவம் வழங்க வேண்டும்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தவறு செய்தால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை நாடுவோம்
தேர்தல் ஆணையம், தேர்தல் அலுவலர்கள் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு இணக்கமாக இருக்கக் கூடாது. ஜனநாயக முறைப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வாக்கு எண்ணும் பணியில் தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுவோம். தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுப்போம்.
அதிமுக ஆட்சியின்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 2 வார்டு உறுப்பினர்கள் அதிமுகவினர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ஆனால், அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கவில்லை. நேர்மையாகத் தேர்தலை நடத்தினோம்.
ஆனால் திமுக அரசு தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக் கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது.
திமுக தோல்வி பயத்தில் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அதிமுகவுக்கு தோல்வி பயம் எப்போதும் கிடையாது.வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும். வாக்குகள் அதிகம் பெறுபவர்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடாகும்.
தேர்தல் ஆணையம் ஏன் உடந்தையாக உள்ளது? அரசு அலுவலர்களை ஏன் மிரட்டுகிறார்கள் ? தேர்தல் ஆணையம் நடுநிலையோடு, ஜனநாயக முறைப்படி நடந்திட வேண்டும். நீதிமன்றம் தான் ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும்.என கூறியுள்ளார்.
![வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நீதிமன்றம் செல்வோம்-எடப்பாடியார் 1 images4](https://dhinasari.com/wp-content/uploads/2022/02/images4.jpg)