சென்னை:
அரசியல் களத்தில் குதித்துள்ள கமல்ஹாசன், வரும் பிப்.21ல் அதிகாரபூர்வமாக கட்சிக் கொடியை ஏற்றப் போவதாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, அரசியல் தலைவர்கள் பலரை சந்தித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று அரசியல் களத்தில் ஒரு காலை முன்னுக்கு வைத்துள்ள ரஜினியையும் திடீரென சந்தித்துப் பேசினார்.
இன்று ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு திடீரென வந்தார் கமல்ஹாசன். ரஜினியை சந்தித்தார். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், இது வெறும் நட்பு ரீதியலான சந்திப்பு. அரசியல் இல்லை. தமது அரசியல் பயணத்தில் பங்கேற்க ரஜினியை அழைத்தேன். தமது அரசியல் பயணத்தில் பங்கேற்பது ரஜினியின் விருப்பம். ஆனால் அவரை வற்புறுத்த முடியாது” என்று கூறினார்.
இதன் பின்னர், கமலுடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கமல் அரசியல் பயணம் துவக்கியுள்ளார். அதற்கான அழைப்பிதழ் கொடுத்தார். அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துள்ளேன். நண்பர் கமல் பணத்திற்கோ, பெயருக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. தமிழகத்திற்கு நல்லது செய்யவும், மக்களுக்கு நல்லது செய்யவும் வந்துள்ளார். கமலுக்கு எல்லா ஆசியும் கிடைக்க வேண்டும் என ஆண்டவைன வேண்டிக் கொள்கிறேன். கமலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவித்தேன். சினிமாவில் எனது பாணி வேறு, அவரது பாணிவேறு. அதேபோல் அரசியலிலும் வேறு வேறாக இருக்கும். ஆனால், மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்” என்று பேசினார்.
இருவரது திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் இன்று பரபரப்பைக் கிளப்பியது. தேசிய ஊடகங்களிலும், இந்த சந்திப்பு குறித்து பரவலாக விவாதிக்கப் பட்டது.