மதுரை விருதுநகர் செங்கோட்டை வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட நிலையில் இந்த வழித்தடத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை கொல்லம் இடையே இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கல் முடிந்து மின்சார எஞ்சின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் மிகப்பெரிய நகரங்களாக செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் சங்கரன் கோவில் கடையநல்லூர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மற்றும் மிகப்பெரிய சுற்றுலா மையமான குற்றாலமும் தென்காசி அருகில் உள்ளது .
இதனால் இந்த வழித்தடத்தில் ரயிலில் பயணிப் போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
மேலும் சபரிமலை சீசன் காலத்தில் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் பக்தர்கள் சென்னை எழும்பூர் கொல்லம் ரயில் மற்றும் பொதிகை ரயில் மூலம் செங்கோட்டை , அல்லது புனலூர் வந்து சபரிமலைக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் இந்த ரயில் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.
ஆனால் பயணிகளின் நலன் கருதி போதிய ரயில்களில் இயக்க தென்னக ரயில்வே முன் வருவதில்லை.மீட்டர் கேஜ் பாதையில் இந்த வழித்தடத்தில் கொல்லம் செங்கோட்டை விருதுநகர் மதுரை கோயமுத்தூர் இடையே இயங்கிய ரயில் தற்போது இயக்கப்படவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்பிக்கள் வலியுறுத்தி வந்தும் இதுவரை இயக்குவதற்கான சூழல் இல்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி போத்தனூர் ரயில் வழித்தடம் அகல ரயில் பாதை பணிகள் முடிந்ததும் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழித்தடத்தில் கொல்லத்திற்கு மீண்டும் ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டது ஆனால் தற்போது வரை இந்த ரயில் இயக்கப்படவில்லை.
மேலும் மதுரை செங்கோட்டை வழிதடத்தில் 16 முதல் 18 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயில் தற்போது மயிலாடுதுறை செங்கோட்டை இடையே 11 பெட்டிகளாக குறைக்கப்பட்டு இயங்குகிறது. மற்றொரு ரயில் மதுரை செங்கோட்டை குருவாயூர் உடைய 14 பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் சாதாரண பயணிகளின் நலன் கருதி மதுரை செங்கோட்டை இடையே மின்சார ரயில் இயக்கவும் திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு தற்போது இயக்கப்படும் வாரம் ஒருமுறை ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும், ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து தென்காசி விருதுநகர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட வாரம் ஒரு முறை ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும் இராமேஸ்வரத்தில் இருந்து விருதுநகர் செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கவும் ரயில்வே பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர் .
வரும் பிப்ரவரி மாதம் வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தில் புதிய ரயில்களை துவக்கி வைப்பாரா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்