ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தேடலில் இருந்து தலைமறைவாக இருந்து வந்த திமுக., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் வசித்து வந்த ஜாபர் சாதிக் (36). திமுக.,வில் னெ்னை மேற்கு மாவட்ட அயலக துணை அமைப்பாளராக இருந்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இந்நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்ட மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். மேலும், ஜாபர் சாதிக் போலி பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில், இரண்டு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது. ராஜஸ்தானில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பிற்பகல் 2 மணிக்கு இது குறித்து விளக்க செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
சர்வதேச போதை கடத்தல் மன்னனும் திமுக., முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் இன்றுகாலை கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரது கைது குறித்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் வெளியிட்ட தகவல்கள்…
ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமான தொழிலில் முதலீடு செய்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜாபர் சாதிக் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது. ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார்.
உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மெத்தம்பெட்டமைன் தயாரிப்பின் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை உறுதி. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார் அவர்.
முன்னதாக, தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் – என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.