சென்னை: தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்? என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள். அப்போதெல்லாம் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, வலியுறுத்தி கேட்டால், அவர்கள் விருப்பப்படி மதமாறுகிறார்கள் என்பதை உறுதி செய்து அனுப்பிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்புதல் என்பதிலும் சட்டம் அதே கண்ணோட்டம்தானே இருக்க முடியும்? அதனை தடுக்க காவல்துறைக்கு எந்த அதிகாரமோ, முகாந்திரமோ இல்லை. காவல்துறை தை வெள்ளிக்கிழமையான நேற்று சென்னை மேற்கு மாம்பலம் காமாட்சி அம்மன் கோயிலில் வழிபட பக்தர்களை அனுமதிக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மசூதியிலோ, சர்ச்சிலோ இதுபோல காவல்துறை தன் இஷ்டத்திற்கு சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளுமா?! இந்துக்கள் என்றால் அலட்சியம், தான் வைத்தே சட்டம் என அரசு செயல்படுகிறது என்பதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வராதவரை மதமாற்றம் என்பதைத் தடுக்க முடியாது. இதற்கு அரசியல் கட்சிகள் தயாரில்லை எனில் தாய் மதம் திரும்புவதைக் கண்டு பதட்டம் அடைவது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, ஜனநாயக விரோதமானதும், சட்டவிரோதமானதும் கூட. கிறிஸ்தவர்களோ, முஸ்லீம்களோ இந்துக்களாகி தாய்மதம் திரும்புவதற்குக் காரணம் தன்மானமும், மற்றும் பாரம்பரிய எனும் வேர்களை நோக்கிய பயணம். இதனைத் தடுக்க முனைவதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது. என்று கூறியுள்ளார்.
தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்?!: ராம.கோபாலன் கேள்வி
Published:

