
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக., அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதை அடுத்து மேற்கு வங்க புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க புதிய முதல்வராக பாஜக.,வின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். அவர், மே 9 நாளை பதவி ஏற்கவுள்ளார். முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஒரு தொகுதியில் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மீதமுள்ள 293 தொகுதிகளில் பாஜக., 207 தொகுதிகளைக் கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இதன் மூலம் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.
எனினும் இந்தத் தேர்தல் முடிவை ஏற்காத மம்தா, முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்றார். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது அரசின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், வழக்கமான நடைமுறைப்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையைக் கலைப்பதாக அறிவித்தார்.
பொதுவாக, சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்த பின்னரோ, பெரும்பான்மை ஆதரவை இழந்த பின்னரோ, முதல்வர் பதவியில் இருக்கும் நபர் தன் ராஜினாமாக் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். எனினும் மம்தா பானர்ஜி ராஜினாமா கடிதம் அளிக்க மறுத்ததால், அவர் முறையாக பதவி விலகும் முன்னரே, தாமாகவே சட்டசபை நேற்று கலைக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்கு வங்க புதிய முதல்வர் தேர்வு குறித்து, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பின் இன்று அறிவிக்கப்படும் என்று பாஜக., தெரிவித்தது. அதன்படி, உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், சட்டசபைக் கட்சிக் கூட்டம் மாலை 4 மணிக்கு நடந்தது. அதில் முதல்வர் யார் என்பது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.
அதன்படி, சட்டசபைக் கட்சி தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். அவர் மே 9 சனிக்கிழமை நாளை பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்க புதிய அரசின் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் நிலையில், இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.



