
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் திருக்கோவில் விளங்குகிறது. இக்கோவில் மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் பெரியாழ்வார் அருள் பாலிக்கின்றனர். ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த இடமாக ஆண்டாள் கோவில் அருகில் உள்ள நந்தவனம் வழங்குகிறது.
இந்த நந்தவனத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆண்டாள் அவதரித்த திரு நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி இந்த நந்தவனத்திற்கு வந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. ஒவ்வோர் மாதமும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா ஐதீக முறைப்படி கொண்டாடப்படுகிறது.
ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரம். இந்த நாளில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் இரு முறை வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரும் ஆடிப்பூரம் நாளில், ஆண்டாள் பிறந்த தினமாகக் கருதப்பட்டு. அன்று, பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெறுகிறது.
இன்று வந்த பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் கோவிலில் இருந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நந்தவனத்திற்கு வந்ததும் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஆண்டாளை சர்வ அலங்காரத்தில் தரிசனம் செய்து சென்றனர்.



