
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் சிறப்பு பூஜையுடன் புதிய காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு காலண்டர் உற்பத்தி துவங்கப்பட்டது. மாத முதல் நாளிலேயே அந்த மாதத்திற்கான விடுமுறை நாட்களை அறிந்து கொள்ளும் வைகையில் நாட்காட்டி தயாரித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு மற்றும் அச்சு தொழில் பிரதானமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் ஆடி மாத 18ம் பெருக்கு நாளை முன்னிட்டு இன்று சிவகாசியில் உள்ள அனைத்து காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களிலும் 2027ம் ஆண்டிற்கான காலண்டர்களின் புதிய ஆல்பம் வெளியிடப்பட்டு காலண்டர் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
வரும் 2027 ஆம் ஆண்டில் தயாரிக்கப்படும் அனைத்து விதமான காலண்டர்களையும் ஆல்பமாக உருவாக்கி அதனை வைத்து பூஜை செய்து வியாபாரிகளிடம் வழங்கி புதிய ரக காலண்டர்களின் வடிவங்கள் காட்சிப்படுத்தி வெளியிடப்பட்டது. 30 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கேற்ப எண்ணற்ற வகையான காலண்டர் தயாரிக்கப்பட உள்ளது.
ஒவ்வோர் ஆண்டுகளும் காலண்டர்களில் புதிய புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது அந்த வகையில் மாதத்தின் முதல் நாளில் அந்த மாதத்தில் எந்த தேதிகளில் வார விடுமுறை என்பதையும், எந்த தேதிகளில் அரசு விடுமுறை வருகிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளும் விதமாக நாட்காட்டி தயாரிக்கப்படுகிறது. மேலும் புது பொலிவுடன் மென்பட்டினால் ஆன கண்களுக்கு விருந்தளிக்கும் காலண்டர்களும் புதிய வரவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக காகிதக் கூழ் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் 2027ம் ஆண்டிற்கான காலண்டர் விலை 12 முத்த 15 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காலண்டர் உற்பத்தியாளர்கள் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் வழக்கத்தை விட ஐந்து முதல் எட்டு சதவீதம் விற்பனை அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

