
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் திருஆடிப்பூர உற்சவம் இன்று 06.08.2026 ஆடி மாதம் 21-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.35 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் கொடியேற்றம் (துவஜாரோஹணம் விமர்சையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் தேரோட்டத் திருவிழா ஆடிப் பூரத்தன்று 14.8.2026 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 06.08.2026 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப் பூரத் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இன்று காலை 9.50 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஆகம முறைப்படி முனைவர் கௌதம் பட்டர் கொடியினை ஏற்றினார். விழாவில் தலைமை பட்டாச்சார்யார் ஸ்ரீவாரி முத்துப்பட்டர், ரகு பட்டர், மணியம் கோபி, சுதர்சன், ஏழுர் நாயுடு மகாஜன சங்கத் தலைவர் வெங்கடேஷ் பெருமாள் உட்பட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று 06.08.2026 முதல் 14.08.2026 வரை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த திருவிழா காலங்களில் பதினாறு வண்டி சப்பரம், தங்கபல்லக்கு, சிம்மவாகனம், சேஷவாகனம், ஐந்து கருடசேவை, பெரிய அன்னவாகனம், யானைவாகனம், கண்ணாடி சப்பரம், பூ பல்லக்கு, குதிரை போன்ற வாகனங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி இரவில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் தேரோட்டத் திருவிழா ஆடிப் பூரத்தன்று 14.8.2026 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த திருவிழாவிற்காக பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு அலங்கார மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சொற்பொழிவு, வீணை இன்னிசை, நடனம், ஆய்வரங்கம், பஜனை, வில்லிசை, நாமசங்கீர்த்தனம், வயலினிசை ஆகியவை நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை என்ன கோவில் இணை ஆணையர் செ.மாரியப்பன், உதவி ஆணையர் மு.நாகராஜன், செயல் அலுவலர் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்துமணிகண்டன் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு ஏராளமான போலிஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

