
முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
விஜய் தலைமையிலான தவெக., கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்று தலா 2 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள இந்திய கம்யூ., கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளன. தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அதே முடிவை எடுத்துள்ள நிலையில், விஜய்க்கு ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நிறைவு செய்யும் வகையில் ஆதரவு கூடியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், 118 உறுப்பினர் தேவை என்ற போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க விஜய்யை ஆளுனர் அழைக்கவில்லை.
இதனால் பெரும்பான்மை பலத்தைப் பெற, திமுக., கூட்டணியில் இருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக.,விடம் தவெக., சார்பில் ஆதரவு கோரி கடிதம் தரப்பட்டது. நேரிலும் சென்று நிர்வாகிகள் பேசினர்.
இதை அடுத்து, இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக., அரசை வெளியில் இருந்து ஆதரிக்க முடிவு செய்துள்ளன. இதற்கான கடிதத்தை இந்திய கம்யூனிஸ்ட் இன்று அதிகாரபூர்வமாக வழங்கியது. இதே முடிவை மார்க்சிஸ்ட் கட்சியும் எடுத்துள்ளது. அதற்கான ஆதரவுக் கடிதத்தை இ-மெயில் மூலம் அக்கட்சி அனுப்பியது.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பின்பற்றி திருமாவளவனின் விசிக.,வும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதை அடுத்து, விஜய் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்துடன், இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார்.
திமுக., கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளில், தேமுதிக., ஐயுஎம்எல் தவிர மற்ற கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன. அதன்படி, திமுக., ஆட்சியை எதிர்த்து போட்டியிட்ட விஜய், திமுக.,வின் கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே தொடர்ந்து ஆட்சியை நடத்தப் போகிறார். ஏற்கெனவே காங்கிரஸ், விஜய்க்காக திமுக., கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தது. காங்கிரஸைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவையும் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.



