
ஆளுநர் விஜய்யிடம் 118க்கு கடிதம் கேட்டுள்ளார். ஏன்?
- ஹெச் அருண்பிரபு
1996ல் தேவகவுடாவை அழைத்த கே.ஆர்.நாராயணன் அத்தனை ஆதரவுக் கடிதங்களும் காட்டினால் தான் ஆட்சி அமைக்க அழைப்பு என்று சொல்லிவிட்டார்.
உச்சநீதிமன்றம் ஆளுநருக்கோ குடியரசுத் தலைவருக்கோ ஓர் ஆலோசனையாகச் சொல்லலாமே தவிர அவர்களது நடவடிக்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுக்க முடியாது.
தவெக.,வினர் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் நாங்கள் தனிப்பெரும் கட்சி, எனவே ஆட்சி அமைக்க உரிமை கோருகிறோம் என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், “காங்கிரஸுடன் கூட்டணி, எங்களுக்கு 112 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு உள்ளது, எனவே ஆட்சி அமைக்க உரிமை கோருகிறோம்” என்று கேட்டது சிக்கல் ஆகியிருக்கிறது. 112 பேர் ஆதரவு எனில், மீதமுள்ள 6 எம்எல்ஏ.,க்கள் எங்கே என்று கேட்கத்தானே செய்வார் ஆளுனர்.
பொம்மை வழக்கு, பொம்மை தீர்ப்பு என்று பலரும் பேசுகிறார்கள். அதன்படி மெஜாரிட்டியை அவையில் தான் நிரூபிக்க வேண்டும். ஆளுநர் மாளிகையில் அல்ல. அர்லேகர் எப்படி நம்பர் கேட்கலாம் என்கிறார்கள்.
1994ல் வந்த பொம்மை தீர்ப்பு அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஆனால் அந்தத் தீர்ப்பு ஏற்கெனவே இருக்கும் அரசுக்குச் சிக்கல் என்றால் பெரும்பான்மை நிரூபிப்பது பற்றியே பேசுகிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை தொங்கினால் யார் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பொம்மையில் ஒன்றும் சொல்லப்படவில்லை.
1983ல் நீதிபதி சர்க்காரியா கமிஷனும் 2007ல் நீதிபதி புஞ்சி கமிஷனும் தொங்கு சட்டமன்றம் வந்தால் ஆளுனர் புதிய அரசு பதவியேற்புக்குப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளனர்.
சொல்லியிருக்கும் வரிசைக் கிரமப்படி ஆளுநர் கட்சிகளை அழைப்பது சிறப்பு என்று இரு கமிட்டிகளும் பரிந்துரைத்துள்ளன.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி: கூட்டுச் சேர்ரந்து தேர்தலில் போட்டியிட்டு தேவையான எண்ணிக்கையில் வெற்றி பெற்ற கட்சிகளை ஒன்றாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
தனிப் பெரும் கட்சி: தேவையான ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்திம் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி: தேர்தலுக்குப் பிறகு ஒத்துப்போய் அரசில் பங்குபெற ஒப்புக்கொண்ட அத்தனை கட்சிகளையும் (சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட) ஆதரவுக்கான விவரங்களைப் பெற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
வெளியிலிருந்து ஆதரவு: தேர்தலுக்குப் பிறகு ஒத்துப்போய் அரசில் பங்குபெற ஒப்புக்கொண்ட, வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்ட அத்தனை கட்சிகளையும், (சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட) ஆதரவுக்கான விவரங்களைப் பெற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
இதுதான் ஆளுநர் பின்பற்ற வேண்டிய நடைமுறை. சட்டசபையில் எண்ணிக்கையை நிரூபித்தால் போதும் என்று பொம்மை தீர்ப்பில் சொல்லி விட்டார்கள் என்று ஒற்றை வரியைப் பிடித்துக்கொண்டு “ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.



