தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியதற்காக தவாக தலைவர் வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கடந்த 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற வேல்முருகனை கைது செய்த போலீஸார், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கில் புழல் சிறையில் அடைத்தனர்.
அங்கு 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால், வேல்முருகனின் உடல்நிலை பாதிப்படைந்தது. இந்நிலையில், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கபட்டு இருந்த அவரை மீண்டும் கடலூர் போலீஸார் கைது செய்துள்ளனர். என் எல் சி முன் போராட்டம் நடத்திய வழக்கில், அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்குமுறையையும் கண்டித்து இன்று காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

