சென்னை: ஹிந்து தெய்வங்களை சாத்தான்கள் என்றும், ஆலயங்களை சாத்தான் குடியிருக்கும் இடம் என்றும் கூறிய கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ் தேச துரோகக் குற்றம் செய்தவராகக் கருதி, நாடு கடத்தப் படவேண்டும் என்று கோரியுள்ளது பால் முகவர் சங்கம். அதன் நிறுவனர் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி விடுத்த அறிக்கையில்,
“மதச்சார்பற்ற தேசமா இந்தியா?”
இந்து சமயம் குறித்து பேசத் தொடங்கினாலோ அல்லது எழுதத் தொடங்கினாலோ உடனடியாக இந்துத்துவா முத்திரை குத்த தொடங்கி விடுகின்றனர்.
அதிலும் குறிப்பாக திராவிட கட்சிகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு “இந்து என்றால் பாகற்காயாக கசக்கிறது”. பிற மதங்கள் என்றால் கற்கண்டாக சுவைக்கிறது”.
அண்மையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை காண நேர்ந்த போது அவரது உண்மையான சுயரூபம் வெளிப்பட்டதை உணர்ந்தேன்.
ஏனெனில் தமிழ்க்கடவுளாக முருகனை ஏற்றுக் கொண்டவருக்கு வினாயகப் பெருமானை ஏற்றுக் கொள்வதில் உள்ள முரண்பாடு காரணமாக பார்வதி, சிவனை அவர் பேசுகின்ற வார்த்தைகள் அவ்வளவு அறுவறுக்கத்தக்கவை.
இந்துக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும் ஆனால் இந்து மத கடவுள்கள் வேண்டாம், இந்து மதமே வேண்டாம் என்கிற இவர்களின் மத துவேச சிந்தனைக்கு தற்போது சரியான பாடம் புகட்ட வேண்டிய தருணம் வந்து விட்டதாகவே உணர்கிறேன்.
மேலும் கிறிஸ்தவ மத போதகரான லாசரஸ் அவர்களின் காணொளியை சமீபத்தில் சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. அதில் “இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தையும் விட தமிழகத்தில் தான் சாத்தான்களின் அரங்குகள் அதிகமாக இருக்கிறது.
பிற மாநிலங்களில் தமிழகத்தில் இருப்பது போன்று பெரிய, பெரிய கோவில்கள் சாத்தானின் அரங்குகள் கிடையாது” என “இந்து கோவில்கள் அனைத்தும் சாத்தான் களின் கூடாரம்” என பேசுவதை கண்ட போது “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்” என்கிற மீசைக்கார மாக்கவியின் வைர வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
ஏனெனில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்கள் மதங்களால் பிரிந்திருந்தாலும் கூட தமிழன், இந்தியன் என்கிற உணர்வால் ஒன்றுபட்டு நிற்கிறோம். நமக்குள் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைத்து அதன் மூலம் ஆதாயம் தேடும் முயற்சியையே லாசரஸ் போன்ற, சீமான் போன்றவர்கள் செய்து வருவதை கண்கூடாக காண முடிகிறது.
இதுவே இந்து சமயத்தை சேர்ந்த ஒருவர் பிற மதத்தினர் வழிபடும் ஆலயங்களை லாசரஸ் பாணியில் சாத்தான்கள் வாழுமிடம் என பேசினால் உடனடியாக மதங்களை காக்க வந்த காவலர்கள் பொங்கி எழுந்திருப்பார்கள்.
இந்துக்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னியாகவும், பிற மதத்தினருக்கு வந்தால் அது இரத்தமாகவும் பார்க்கும் மனோபாவம் முதலில் நீங்க வேண்டும்.
பகுத்தறிவு என்கிற பெயரில் குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டுமே சாடுவது என்பது நாளடைவில் எதிர்மறையான நிகழ்வுகளையே ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.
உண்மையான பகுத்தறிவு என்றால் மதங்களை கடந்து மூட நம்பிக்கைகளை துணிச்சலோடு எதிர்க்க வேண்டும். அது தான் உண்மையான பகுத்தறிவுவாதிக்கு அடையாளமாகும்.
மதங்களின் பெயரால் பிரச்சார வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் லாசரஸ்கள் இனியாவது திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுகிற காலம் வெகு விரைவில் வரும்.
எச்.ராஜா மற்றும் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகளை கண்டிப்பவர்கள் லாசரஸ் போன்ற மதவெறியர்களை கடுமையாக கண்டிப்பதோடு மட்டுமின்றி இவர்களைப் போன்ற மத துவேஷ கருத்துக்களை பரப்புவோர் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகளாகவே கருதப்பட்டு நமது இந்திய தேசத்தில் இருந்து துரத்தப்பட, நாடு கடத்தப்பட வேண்டியவர்களாக அறிவிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் நமது தேசம் மதச்சார்பற்ற நாடு என மார்தட்டிக் கொள்வதில் எள்ளளவும் அர்த்தமில்லை.
– என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனரும் மாநில தலைவருமான சு.ஆ. பொன்னுசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும், மோகன் சி.லாசரஸ் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 12.30 க்கு புகார் அளிப்பதற்காக வந்தார். ஆனால், “சென்னை மாவட்டம் தவிர இதர மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த புகார்களை தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் பெறக்கூடாது என உயர் நீதிமன்ற ஆணை” இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் தங்களது புகாரினை வாங்க மறுத்து விட்டதாகக் கூறிய பொன்னுசாமி, மோகன் சி.லாசரஸ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பிற்பகல் 1.00 மணி அளவில் மனு அளிக்க இருப்பதாகக் கூறினார்.