செங்கோட்டையில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அழகியமணவாளப் பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதே போல நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள அழகிய மணவாள பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்கார, தீபாராதனை நடந்தது.
பின்னர் இன்று மாலை 6 மணிக்கு செர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சொர்க்கவாசல் வழியே பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபாடு நடத்தினர்.
இதன் பின்னர் கோயில் வெளிப் பிராகாரத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.