சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி!
நேற்று அவர், மானாமதுரை அருகே கீழ்ப்பசளை கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு வரவேற்பு தெரிவித்து, ஆரத்தி எடுக்க 25க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்பாடு செய்து நிர்வாகிகள் அங்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 500 பணம் கொடுக்கப் படும் என்று கூறப் பட்டிருந்ததாம். எனவே ரூ. 500 கிடைக்கும் என்ற ஆர்வத்திலும் ஆசையிலும் கார்த்திக்கு ஆரத்தி எடுக்க வந்துள்ளனர் அந்தப் பெண்கள்.
ஆனால், அவர்கள் ஆரத்தி எடுத்த பிறகு, அவர்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மொத்தமாக ரூ.800தான் கொடுத்தனராம். அந்த பணத்தை அனைவரும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர் அந்தப் பெண்கள். தலைக்கு ரூ.30 கூட கிடைக்காமல் இப்படி ஏமாற்றி விட்டனரே என்று வெகு நேரம் அவர்கள் நிர்வாகிகளிடம் பிரச்னை செய்து கொண்டிருந்தனர்.
800 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என்று ஆதங்கப்பட்ட அந்தப் பெண்கள், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், நேரடியாக வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடமே சென்று புகார் தெரிவித்தனர்.
அவரோ, அந்தப் பெண்களிடம் ஆரத்தி பிரச்னையை எல்லாம் மூட்டை கட்டி வையுங்கள். அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீடுதேடி வரும்! என்று கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.
இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்கள், ஆரத்தி தட்டு எடுத்ததுக்கே பணம் முழுசா வரல, அக்கவுண்டுல எப்படி 6 ஆயிரம் ரூபாய் போடப் போறாங்களாம்? என்று சபித்தவாறே கலைந்து சென்றனர்.
இதனிடையே ஆரத்தி தட்டுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்த காட்சிகள் வெளியாகி உள்ளதால் சம்பந்தபட்ட காங்கிரஸ் பிரமுகர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.