தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகமும், புதிய டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
தமிழக தலைமைச் செயலாளராக 2016 டிசம்பரில் நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் ஜூன் மாத இறுதியில் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
அவர் ஓய்வு பெறுவதை அடுத்து, தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். சண்முகம் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வரை தலைமைச் செயலாளர் பதவியில் நீடிப்பார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.சண்முகம். வாழப்பாடி அருகே குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து, வேளாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றாவர். அவரது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்பது பெருமைக்குரியது!
1985ஆம் ஆண்டில் பயிற்சி உதவி ஆட்சியராக தஞ்சையில் பணியில் சேர்ந்தார். சேரன்மாதேவி சார் ஆட்சியராக பணி புரிந்தவர், வணிவரித்துறை துணை ஆணையர், பட்டுவளர்ச்சி இயக்குனர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சியர் என பல இடங்களில் பணி புரிந்துள்ளார்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர், உணவுத் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் என பணியாற்றியவர்.
அப்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தபோது நிதிநிலையை சிறப்பாக நிர்வகித்தார்! இலவச அரிசி திட்டம், கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கான அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்றவை இவருடைய பணிக்காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. நியாய விலைக்கடைகள் கணினி மயம், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டமான ‘நீட்ஸ்’ மற்றும் நீர்நிலைகளைக் காக்கும் குடிமராமத்து திட்டம் போன்றவை சிறப்பாக செயல்படுத்தப் பட்டுள்ளன.