நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இன்று காலை ஆடித் தபசுக் காட்சி நடைபெற்றது. ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
சங்கரன்கோவில் அருள்மிகு கோமதிஅம்மன் தபசுக் காட்சி கொடுத்து அன்பர்களுக்கு அருள் புரிந்தார். இந்த விழாவுக்காக சங்கரன்கோவிலுக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
கயிலை மலையில் பரமசிவனிடம் சிவபெருமானே, தாங்கள் வேறு விஷ்ணு வேறு என்று வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு, தாங்கள் நாராயணருடன் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தை காட்டியருள வேண்டும் என்று உமையம்மை வேண்டிக் கொண்டார்.
அதற்கு இணங்கிய சிவபெருமான் உமையை நோக்கி பூலோகத்தில் பொதிகை மலைச் சாரலில் உள்ள புன்னை வன தலத்தில் தவம் செய். நீ விரும்பியபடி சங்கர நாராயண கோலத்தைக் காண்பாய். அதன் மூலம் அது சங்கர நயினார் கோயில் என்றும், சங்கர நாராயணர் தலம் என்றும் பேர் பெறும் என்று கூறினார்.
அதன்படி ஆடி மாதம் உத்திராட நன்நாளில் கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநயினாராக காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய காட்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.